ஆணவத்தை அழிக்கும் நவராத்திரி விரதம்!

ஆணவத்தை அழிக்கும் நவராத்திரி விரதம்!

நவராத்திரி, சிவராத்திரி, ஏகாதசி என இறைவனை இரவு நேரத்தில் வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. காரணம், இரவில் இறை தியானம் செய்வது மிகவும் மகிமையுள்ளது.

எல்லாமே தன்னால் தான் நடக்கிறது என்று மனிதன் எண்ணுகிறான். தனக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்ற எண்ணத்தையே அவன் விட்டுவிடுகிறான்.

இந்த அகம்பாவமாகிய இருளில் இருந்து, நம்மை மீட்டுக் கொள்ளவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இதன் முதல் மூன்று இரவுகளில், துர்க்கையை வணங்கி, பொறாமை, ஆசை போன்ற தீய குணங்களில் இருந்து விடுபட வேண்டும்.

அடுத்த மூன்று நாட்கள், இலட்சுமியை பிரார்த்திக்கும் போது, ‘எனக்கு பணம் கொடு’ என்று உரிமையுடன் கேட்பது போல, ‘அன்பு, இரக்கம், தானம் ஆகிய குணங்களையும் கொடு’ என்றும் கேட்டுப் பெற வேண்டும்.

சம்பாதிக்கும் பணம் தனக்கு மட்டுமின்றி, இயலாதவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.

இறைவன் என்பதே நிஜம் என்ற உணர்வைப் பெற வேண்டுமானால், சாதாரண கல்வியறிவு போதாது. மெய்யறிவு வேண்டும். அதற்காகத்தான் கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியை பூஜிக்க வேண்டும்.

இப்படி ஆத்மா சுத்தமாகி விட்டால், மனிதன் தன் ஆன்மிக நிலையில் வெற்றி பெறுகிறான். இந்த வெற்றியையே, பத்தாம் நாளில் விஜயதசமியாகக் கொண்டாட வேண்டும்.

இராவணன் போன்றவர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது வழக்கம். இராவணன் அசுர சக்தி.

பொறாமை, ஆசை, கஞ்சத்தனம் போன்றவை மனிதனை பீடித்திருக்கும் அசுர குணங்கள். இந்த குணங்களை தீயிட்டுக் கொளுத்துவதன் அடையாளமே உருவ பொம்மை எதிர்ப்பு.

ஆன்மிகத்தை வெறும் புராண அளவுடன் நிறுத்திக் கொள்ளக் கூடாது. புராணக் கதைகளில் பொதிந்துள்ள தத்துவங்களே முக்கியம். அதைப் புரிந்து, திருவிழாக்களை கொண்டாட வேண்டும்.

இரவு தியானம், மகான்களின் வாழ்வில் திருப்பத்தைத் தந்தது. காளி உபாசகரான ராமகிருஷ்ண பரமஹம்சர், பஞ்சவடி எனும் மரங்கள் அடர்ந்த பகுதியில், பல இரவுகள் தியானத்தில் இருந்துள்ளார்.

தன் சீடர்களை இரவில் தூங்குவதற்கு அனுமதிப்பதில்லை. இரவில் தியானம் செய்தால் தான், இறைவனைக் காண முடியும் என சீடர்களிடம் சொல்வார்.

ராமகிருஷ்ணரின் சீடர்களான விவேகானந்தரும், (அப்போது அவர் நரேந்திரன் என்னும் இளைஞர்) கிரீஷ் சந்திரகோஷ் என்பவரும் இரவில் ஒரு தோட்டத்தில் அமர்ந்து தியானம் செய்வர்.

கொசுத்தொல்லை காரணமாக, கிரீஷால் தியானத்தில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை.

ஒருநாள், அவர் கண்விழித்து பார்த்த போது, நரேந்திரரின் மேல் கொசுக்கள் தேன் அடை போல் மொய்த்திருந்தன. ஆனால், அவர் கண்விழிக்கவில்லை.

இரவு நேர தியானத்தால் கிடைத்த மனவுறுதி காரணமாகத்தான் அவர் விவேகானந்தராக முடிந்தது.

மகிஷன் என்ற அசுரனைக் கொன்ற பராசக்தியை, சரஸ்வதி, இலட்சுமி, துர்க்கை என்ற வடிவங்களில் வழிபட வேண்டும். விதவிதமான அலங்காரங்களைச் செய்ய வேண்டும்.

கொலு வைக்க வேண்டும். சுண்டல் சாப்பிட வேண்டும். இத்துடன் முடிந்து போனது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், நவராத்திரி தத்துவம் மிகவும் உயர்வானது. நவராத்திரி நாட்களில், நம் மனதிலுள்ள ஆணவத்தை வேரறுக்கும் வகையில், அம்பாளிடம் தியானம் செய்வோம்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net