என்னை கொலை செய்ய இந்தியாவின் ரோ முயற்சி!

என்னை கொலை செய்ய இந்தியாவின் ரோ முயற்சி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொல்வதற்கான சதிமுயற்சிகளிற்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோ காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் இந்து நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் இந்து நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளதாவது

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் சிறிசேன இந்திய இலங்கை உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்திய புலனாய்வு அமைப்பு என்னை கொலை செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது என தெரிவித்துள்ள சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இது குறித்து தெரியாமலிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர்கள் இதனை தெரிவித்தனர்

ஜனாதிபதி இதனை தெரிவித்தவேளை நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் என பெயர் குறிப்பிடவிரும்பாத அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை இதனை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி ஊடக பிரிவினை தொடர்புகொண்டவேளை இது குறித்து ஆராய்ந்து கருத்து தெரிவிக்கின்றோம் என அவர்கள் தெரிவித்தனர் எனினும் பின்னர் தொடர்புகொள்ளவில்லை

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற் விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இந்த குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.

இலங்கை அரசியல் தலைவர் ஒருவர் இந்திய புலனாய்வு அமைப்பின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது இது முதல்தடவையில்லை.

2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது தோல்விக்கு இந்தியாவின் ரோ அமைப்பே காரணம் என தெரிவித்திருந்தார்.

தன்னை கொல்வதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கம் அக்கறையின்றி உள்ளது என தெரிவித்தவேளையே சிறிசென இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தன்னை கொலை செய்யும் சதி முயற்சி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை ரோ அமைப்பை சேர்ந்தவராகயிருக்கவேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன சிஐஏ என்ன செய்கின்றது என்பது டிரம்பிற்கு தெரியாமலிருப்பதை போன்று இந்திய பிரதமருக்கு இது தெரியாமலிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 9779 Mukadu · All rights reserved · designed by Speed IT net