வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு!

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு!

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இன்று சபையின் கடைசி அமர்வு இடம்பெறவுள்ளது.

2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர், முதலாவது சபை அமர்வு 2013 ஒக்டோபர் 25ஆம் திகதி கூடியது.

அதன்படி, சபையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடியவுள்ளது.

இதன் பின்னர்,அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வரை,ஆளுநரே வடக்கு மாகாணத்தை முகாமைத்துவம் செய்வார்.

அதேவேளை, வடக்கு மாகாண சபையின் முதலாவது சபையின் இறுதி அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த அமர்வு சம்பிரதாய ரீதியான விடைபெறும் அமர்வாக இருக்கும் என்றும், சபையில் தீர்மானங்கள் எதுவும் முன்வைக்கப்படாது எனவும், விவாதங்கள் நடத்தப்படாது என்றும் அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

சர்ச்சைகளின்றி இந்த அமர்வை மகிழ்ச்சியாக நடத்த ஒத்துழைக்குமாறும் அவர் உறுப்பினர்களிடம் கோரியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net