ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை!

ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை!

பிரதமர் மற்றும் அமைச்சரவையை மாற்றியமைக்கும் பூரண அதிகாரம் ஜனாதிபதிக்கும் உண்டு என்றும், அதனை மறுக்கும் அதிகாரம் நாடாளுமன்றிற்கு இல்லையென்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”நேற்றைய நாடாளுமன்ற அமர்வில், பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு அரசியலமைப்பிற்கு விரோதமான முறையில் நடத்தப்பட்டதுடன், அதில் அவர்கள் வெற்றிபெற்றதாக கூறினர்.

இதன் பின்னர் நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில், இந்த சம்பவங்கள் குறித்து சர்வதேசத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த பிரதமருக்கு வாய்ப்பளிப்பதாக சபாநாயகர் கூறினார்.

இதற்கமைய நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அரசியலமைப்பை மீறிய செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தவே, பிரதமர் மஹிந்த இன்று தனது உரையினை ஆற்றினார். ஆனாலும் அவருக்கு உரையாற்ற இடம்கொடுக்கப்படவில்லை.

அதுமாத்திரமன்றி இலங்கை அரசியல் வரலாற்றிலேயே, ஒருவர் ஆற்றிய உரைமீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில்லை. ஆனால் அது இங்கு நடத்தப்பட்டது.

பிரதமர் நியமனம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பிவைத்த கடிதத்திற்கு, ஜனாதிபதி பதில் அனுப்பியுள்ளார்.

பிரதமரையும் அமைச்சரவையையும் அமைக்கும் பூரண அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பது அரசியலமைப்பில் உள்ளது. அதனை நிராகரிக்கும் அதிகாரம் நாடாளுமன்றிற்கு இல்லை” என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net