நிறைவேற்று அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர போராடுவோம்!

நிறைவேற்று அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர போராடுவோம்!

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வரும் வரை போராடுவதற்கு வருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினர் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நேற்று (வியாழக்கிழமை) மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுயுள்ளதாவது,

“தற்போது தேவையேற்படின் மீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை நிரூபித்துக் காண்பிக்க எம்மால் முடியும்.

மக்கள் 85 வருடங்களுக்கு மேலாக தங்களின் வாக்குகளை பயன்படுத்தி நாடாளுமன்றினை தேர்வு செய்து ஜனநாயத்தை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் மக்கள் ஆணையினை அரசாங்கம் மீறும் பட்சத்தில் அவர்களை பதவியிலிருந்து நீக்குவதே எந்ததொரு நாட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது எமது நாட்டின் ஜனநாயகம் கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகத்தினையும், நாடாளுமன்றத்தையும் நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

ஆகையால் எதிர்வரும் தேர்தலில் உங்களுக்கு விருப்பமான நாடாளுமன்ற உறுப்பினரையும், கட்சியினையும் தேர்வு செய்யவும் உங்களுக்கு வாய்ப்பு விரைவில் வழங்கப்படும்.

ஆகையால் மக்களாகிய நீங்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டியது அவசியம்.

அந்தவகையில் ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் உட்பட்டு ஆட்சியொன்றை அமைத்து, நாம் தேர்தலை எதிர்நோக்க தயாராகவே உள்ளோம்” என ரணில் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net