சாவகச்சேரி பிரதேச சபைக்கு மத்திய அரசிடமிருந்து நிதி!
சாவகச்சேரி பிரதேச சபையின் சேவைகளை விஸ்தரிப்பதற்கு, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசிடமிருந்து நிதியினை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர்களுக்கும், ஆளுநருக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சாவகச்சேரி பிரதேசசபை தலைவர் வாமதேவன் தலைமையிலான பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்டோர் ஆளுநரை நேற்று ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது, பிரதேச சபையின் சேவையை விஸ்தரிக்க டபிள்கப் வாகனம் ஒன்றினை பெற்றுத்தருமாறும், சபைக்கு போதிய வருமானம் இல்லாமை காரணமாக வீதிகள் மற்றும் வீதி விளக்குகளை பொருத்துவதற்காக மேலதிக நிதியை பெறுவதற்கு ஏற்பாடுகளை செய்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வுகள் மற்றும் மறவன்புலவு பகுதியில் காற்றலை மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர்.
இவற்றினை செவிமடுத்த ஆளுநர் தங்களின் அனைத்து கோரிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் பேச்சுக்களை நடத்தி மத்திய அரசின் நிதியினை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், காற்றலை விவகாரம் மண் அகழ்வு தொடர்பில் நேரடியாக கண்காணித்ததன் பின்னர் நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.