ஈரானில் சீரற்ற காலநிலை – 11 பேர் உயிரிழப்பு!
ஈரானின் வட. மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானின் வடக்கு மாகாணத்திலுள்ள ஃபராஸ் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலேயே கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுகிறது.
இதனால் அங்குள்ள நீர் நிலைகள் பெருக்கெடுத்துள்ளன. இதன் காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன்.
35 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். குறித்த மாகாணத்தில் 270 கிராமங்கள் உள்ள நிலையில், அங்கு வாழும் 56,000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்குள்ள வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும், மக்கள் குடியிருப்புக்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில இடங்களில் மின்சாரத் துண்டிப்பும் தொலைத்தொடர்பு சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
வெள்ளத்தில் மூழ்கியுள்ளவர்களை மீட்க மீட்புப் பணிகள் தொடர்வதாக அந்த நாட்டு மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருவதாகவும் ஈரானின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதுடன் அவர்களுக்குத் தேவையாக உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட்டுவருகின்றன.