அருணாசல பிரதேத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.
வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேத்திலும், நேபாளத்திலும் அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் உணரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 1.45 மணிக்கு இவ்வாறு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சியாங்குக்கு மேற்கு பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திப்ருகார்க் மாவட்டத்திற்கு வடமேற்கில் 114 கி.மீ. தூரத்தில் திபெத் எல்லைக்கு அருகே 40 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதுகுறித்த சேதங்கள் பற்றிய முதற்கட்ட தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் திபெத்திலும் உணரப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
அதேபோல் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இன்று காலை 6.14 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
தொடர்ந்து நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள நவுபிஸில் காலை 6.29, 6.40 மணிக்கு அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 மற்றும் 4.3 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.