இந்தியர்கள் இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும்: வெளியுறவுத்துறை
குண்டு வெடிப்பு சம்பவங்களினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அந்நாட்டுக்கு செல்வதனை இந்தியர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும் தொடர்ந்து குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. இதனால் இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
ஆகையால் இந்தியர்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அத்தியாவசிய தேவைக்காக இலங்கைக்கு பயணம் செய்யும் இந்தியர்கள், கொழும்பிலுள்ள இந்திய தூதரகம், கண்டியிலுள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் தூதரக அதிகாரிகளை எந்த உதவிக்கும் தொடர்புகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்திய தூதரகங்களின் தொலைபேசி எண்களை இந்திய வெளியுறவுத்துறையின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.