மாகாணசபை தேர்தலை நடத்த ஜனாதிபதி மாத்திரமே முயற்சிக்கிறார்!
மாகாணசபை தேர்தலை நடத்த ஜனாதிபதி மாத்திரமே முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் ஜீ.ஹரிதரன் தெரிவித்துள்ளார்.
ஜீ.ஹரிதரனின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை காப்பாற்றுவதற்காக நீதிமன்றம்வரை சென்றனர்.
ஆனால் மாகாணசபை தேர்தலை நடத்த ஐக்கிய தேசிய கட்சிக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டனர்.
மாகாணசபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படாமை ஜனநாயக உரிமை மீறலாகும். எனவே உடனடியாக மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.