வவுனியாவிலுள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி!
வவுனியாவிலுள்ள தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளமையால், அதில் கணக்குரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் உள்ளதனியார் வங்கியொன்றில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவராலேயே பாரியளவு நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்ற உத்தியோகத்தரும் அவரது மனைவியும் குறித்த வங்கியில் பணியாற்றி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் உத்தியோகத்தர், நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் நிதிகளை தனது கணக்கில் வைப்பிலிட்டு வந்துள்ளதாகவும் வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புகளில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், தமது கணக்குகளை சரிபார்த்த போதே இவ்விடயம் குறித்து அறியக் கிடைத்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், உத்தியோகத்தர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள கணக்குரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.