திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவுஸ்திரேலிய பிரஜையின் சடலம்.
திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புராமலை தீவு பகுதியில் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த வயோதிபரொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அவுஸ்திரேலியா – சிட்னி நகரைச் சேர்ந்த ஜோன் ஹோல்டர் (70 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த நபர் குச்சவெளி பகுதியில் ஹொட்டலில் தங்கியிருந்தவேளை புராமலை தீவு பகுதிக்கு குளிக்கச் சென்றுள்ளதாகவும் அதே நேரத்தில் நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளதாகவும் அதனையடுத்து நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதனையடுத்து நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.