வவுனியாவில் மோப்ப நாய் சகிதம் தீவிர தேடுதல்!
வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டனர்.
வவுனியா ஹிச்ராபுரம், அரபாநகர் மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே இன்று (புதன்கிழமை) காலை 7.30 மணியில் இருந்து 10.30 மணிவரை இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் சந்தேகத்துக்கிடமாக எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகத்திற்கிடமான வீடுகள், மசூதி, வீதியால் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்ததுடன் மோப்ப நாயின் மூலமும் சோதனையினை மேற்கொண்டிருந்தனர்.
கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் முக்கிய இடங்களான வைத்தியசாலை, பேருந்து நிலையம், மதஸ்தளங்கள் என்பற்றில் கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதிகளுடன் வருபவர்களிடம் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.