தித்லி புயலால் 8 பேர் உயிரிழப்பு!
வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திராவின் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது.
இந்நிலையில், தித்லி புயலுக்கு விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தித்லி புயாலால் ஆந்திராவின் விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பயன்தரு மரங்கள் முறிந்து வீழுந்தன.
இதனால் விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2 மாவட்டங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாகக் கிழக்குக் கோதாவரி, மேற்குக் கோதாவரி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. கடல் கொந்தளிப்பாக உள்ளதால் நிலைமை சீராகும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடற்கரையோரங்களில் உள்ள வீதிகள் புயலால் பலத்த சேதம் அடைந்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.