ஜப்பான் செல்லவுள்ளார் பிரதமர் மோடி!
இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 13 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாள் பயணமாக, எதிர்வரும் 28 ஆம் திகதி டோக்கியோ செல்கிறார்.
இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் உச்சி மாநாட்டில் இருநாடுகளின் பிரதமர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்துவது வழக்கமாக உள்ளது.
அவ்வகையில், குஜராத் மாநிலம், காந்தி நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியா வந்திருந்தார்.
இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் 13 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, இருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோ செல்லவுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற மோடி, தற்போது ஐந்தாவது முறையாக இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதுடன், 12 ஆவது முறையாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.