புலிகள் தான் நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமான அனுஸ்டித்தனர்!
நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பது தமிழீழ விடுதலைப்புலிகளும் மக்களுமாகவே இருந்ததென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு- அம்பாறை மாவட்ட ஊடக பேச்சாளர் பீ.கோணேஸ் தெரிவித்துள்ளார்.
வெல்லாவெளியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எமது சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமென போராடிய நமது மாவீரர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னின்று நடத்துவது பொதுவாக ஜனநாயக போராளிகள் கட்சியே ஆகும்.
அந்தவகையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மாவீரர் தினம், அன்னைபூபதி அம்மாவின் நினைவேந்தல் மற்றும் மாலதியின் நினைவு நாள் நிகழ்வுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் பொது மக்களுக்கும் உரியவையாகும்.
ஆனால் தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஏற்பாடுகள் செய்வது ஜனநாயகப் போராளிகள் கட்சியினரே ஆவர். ஆகையால் எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக மக்கள் எமது கட்சியினரிடம் தொடர்பு கொண்டு ஏற்பாடுகள் செய்ய முன்வரவேண்டும்
மேலும் எமது கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதனால் இது பலம்வாய்ந்த செயற்பாடுகளாக அமையும். ஆகையினால் வடக்கில் உள்ளவர்கள் எமது தலைமைக்காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய முன்வர வேண்டும்” என பீ.கோணேஸ் வலியுறுத்தியுள்ளார்.