இந்தியாவை உலுக்கிய கோர ரயில் விபத்து: உயிரிழப்பு 59 என முதல்வர் உறுதி!

இந்தியாவை உலுக்கிய கோர ரயில் விபத்து: உயிரிழப்பு 59 என முதல்வர் உறுதி!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளதாக அம் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது திட்டமிட்ட சதி அல்ல என பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சவுர பஜார் பகுதியில் (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் இதுவரையில் 59 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் அமரிந்தர் சிங் கூறினார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், மாநில முதல்வர் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இது விபத்து என்பதை அனைவரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும் எனவும், இது உள்நோக்கத்துடனோ, வேண்டும் என்றோ நடைபெறவில்லை எனவும் கூறினார்.

இந்த விபத்து தொடர்பில் காங்கிரஸ் கட்சியினர் மீதும், நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி மீதும் கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

விபத்து நடைபெற்ற போது, அமைச்சர் சித்துவின் மனைவி உடனடியாக அங்கிருந்து வெளியேறியதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

மேலும் பஞ்சாப்பில் இன்று முழுமையான துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய மதிப்பில் 7 லட்சம் ரூபா நட்ட ஈடு வழங்கப்படவுள்ளது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net