நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு வெட்கக் கேடானது!
மக்களின் பெறுமதிமிக்க வாக்குகளை பெற்று நாடாளுன்றத்திற்கு வந்துள்ள உறுப்பினர்கள் செயற்படும் விதமானது, மிகவும் வெட்கக் கேடானதென சபாநாயகர் கரு ஜயசூரிய கடுமையாக சாடியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் மஹிந்த உரையாற்றிய சந்தர்ப்பத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது, பிரதமர் மஹிந்தவின் இன்றைய உரைமீது வாக்கெடுப்பை நடத்துமாறு ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரினார்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஆசனத்தை சூழ்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டது.
இந்நிலையில், இச்செயற்பாடு மிகவும் அறுவறுக்கத்தக்கதும், வெட்கக் கேடானதுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாடாளுமன்ற விடயங்களில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு என்றும், அதற்கு அனுமதி வழங்குமாறும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்தும் கடும் அமளி ஏற்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.