மட்டக்களப்பில் சிறு குளங்கள் திறந்து வைப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கர்புரம் மற்றும் களுமுந்தன்வெளி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட சிறு குளங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டன.
யு.எஸ்.எயிட், நீர்ப்பாசன திணைக்களம் ஆகியவற்றின் உதவியுடன் பாம் பவுண்டேசன் இந்த குளங்களை அமைத்துள்ளது.
கோடை காலங்களில் பெரும் நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் பகுதியான சங்கர் புரம் மற்றும் களுமுந்தன்வெளி பகுதியில் மழை காலங்களில் நீரை சேமித்து பயிற்செய்கை மற்றும் விவசாயம், குடிநீருக்காக பயன்படுத்தும் வகையில் இந்த குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குளம் அமைப்பு பணிக்காக சுமார் 20 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பாம் பவுண்டேசன் தெரிவித்தது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இராகுலநாயகி மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி பாம் பவுண்டேசன் பணிப்பாளர் சுனில் தம்பேபொல ஆகியோர் கலந்துகொண்டனர்.